த்தோடா.....

இந்த கடை சரக்கும் நல்லா இருக்கே....

இவங்களுக்கு எல்லாம் பிடிக்குதாம்...


படம் 1: உண்மையான தள்ளுபடி ஊனமுற்றவர்களுக்கு மட்டும்..


படம் 2: வலது மேற்பக்க மூலையில் டிவி, இடது மேற்பக்க மூலையில் காலேண்டர்; அதுமட்டுமில்லாமல், மின்விசிறி, டிச்சு பேப்பர், முன்பக்க கண்ணாடியில் 26/11-இன் உண்மையான கதாநயகர்கள்.(ரியல் ஹீரோஸ் )



படம் 3: ஓட்டுனரின் இருக்கைக்கு வலது பக்கத்தில் செய்தித்தாள் பெட்டி, இடது பக்கத்தில் முதலுதவி பெட்டி.


இந்த மனிதரை பாராட்ட வார்த்தைகள் இல்லை..


ஆசினுக்கு மும்பையில் நண்பர்கள் இன்னும் சரியாக செட் ஆகவில்லை என்று தெரிகிறது. குறிப்பாக திரையுலகில் ஆசினுக்கு வேண்டப்பட்டவர்கள் ரொம்பக் குறைச்சல் என்று எண்ணத் தோன்றுகிறது அவரைப் பற்றி அங்கு ஊர்ந்து கொண்டிருக்கும் ஒரு 'வாசனை'யான வதந்தியைப் பார்த்தால்.

முன்னணிக்கு வரும் ஹீரோயின் குறித்து திரையுலகில் வதந்திகள் கிளப்பப்படுவது சகஜமானதுதான். அது தமிழ் சினிமா என்று மட்டுமல்ல இந்திய சினிமா உலகம் முழுவதும் அது இருக்கத்தான் செய்கிறது.

அந்த வகையில் ஆசின் குறித்து மும்பையில் ஒரு வதந்தியை கிளப்பி விட்டுள்ளனராம். அது, ஆசின் ஷூட்டிங் முடித்து விட்டு கழற்றிக் கொடுக்கும் உடைகளை காஸ்ட்யூம் டிசைனரிடம் கொடுக்க முடியவில்லையாம்.

காரணம், அதில் வியர்வை நாற்றம் மூக்கைத் துளைக்கிறதாம். இதனால் ஆசினுக்கான காஸ்ட்யூம்களை திரும்பி வாங்குவதற்கு காஸ்ட்யூம் டிசைனர்கள் பெரும் அவஸ்தைப்படுகிறார்களாம். (எப்படியெல்லாம் கெலப்புரங்காப்பா... )

ஆனால் இது சுத்தமான வதந்தி என்று நடுநிலையாளர்கள் கூறுகின்றனர். எந்தக் காலத்தில் இருந்து கொண்டு ஆசினைப் பற்றி இப்படிப் பேசுகிறார்கள் இவர்கள் என்கிறார்கள் இந்த நடுநிலையாளர்கள்.

ஆசின் முன்னணிக்கு வருவதைப் பிடிக்காதவர்களே இப்படி வதந்தியை கிளப்பி விடுவதாக ஆசின் தரப்பு புலம்புகிறதாம்.

முன்னணிக்கு வருவதற்குள் எத்தனையை சமாளிக்க வேண்டியிருக்கிறது, சகிக்க வேண்டியிருக்கு...

நன்றி: தட்ஸ்தமிழ்

BorgeauD Watch
அவசர யுகத்தில் கைகடிகாரம் என்பது மக்களின் அத்தியாவசிய பொருட்களில் ஒன்றாகிவிட்டது. சிலருக்கு டைட்டானியம் கடிகாரம் என்றால் ஆசை. சிலருக்கு பிரேஸ்லட் கடிகாரம் என்றால் உயிர் என கடிகார விரும்பிகளை ரகம் ரகமாக பிரித்து கொண்டே போகலாம்.

இந்த வரிசையில் தற்போது இந்தியர்களை அதிகம் கவரும் வகையில் புதிய கடிகாரம் ஒன்று விரைவில் விற்பனைக்கு வரவிருக்கிறது. இது நேரத்தை மட்டும் காட்டாது. கூடவே ராகு காலத்தையும் கணித்துக் காடடுமாம்.

சுவிட்சர்லாந்தை சேர்ந்த இரண்டு நிறுவனங்கள் இதை தயாரித்து வருகின்றன. சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும் பஞ்சாங்கத்தை அப்படியே கடிகாரத்துக்குள் கொண்டு வந்துள்ளன இந்த நிறுவனங்கள்.

இந்த கடிகாரம் போர்கியாட் என்ற பெயரில் சந்தைக்கு வரவிருக்கிறது. இந்த கடிகாரம் அன்றைய தினத்தில் ராகு காலம் எப்போது வரும் என்பதை முன்கூட்டியே தீர்மானித்து விடுகிறது. அந்த 90 நிமிட ராகு கால நேரத்தை கடிகாரத்தில் இருக்கும் அதற்கான நேர பகுதியில் துல்லியமாக காட்டுகிறது.

அப்பகுதி முழுவதும் ஊதா, சிவப்பு போன்ற வண்ணங்களாலான திரவம் ஒன்று நிரப்பப்படுகிறது. ராகு காலம் வந்தவுடன் அந்த திரவம் கொஞ்சம் கொஞ்சமாக மறைய தொடங்குகிறது. சரியாக ராகு காலம் முடியும் நேரத்தில் அந்த திரவமும் முழுமையாக காலியாகி விடுகிறது.

இந்த கைகடிகாரம் ராகு கலத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க உதவுகிறது. இது இந்திய மக்களிடையே பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யாருக்கு உதவுகிறதோ இல்லையோ, தேர்தல் ஜூரத்தில் இருக்கும் அரசியல்வாதிகளுக்கு கண்டிப்பாக உதவும்.

நன்றி: தட்ஸ்தமிழ்

உ.பி. மாநிலம் பதேபூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜக்லால் என்ற 80 வயது ரிக்ஷாக்காரர், 23வது தடவையாக லோக்சபா தேர்தலில் போட்டியிடவுள்ளார். தள்ளாத வயதாக இருந்தாலும், நிச்சயம் போட்டியிடுவேன் என்று உறுதியான குரலில் கூறுகிறார் இந்த ரிக்ஷா தாத்தா.

வாக்குச்சாவடிக்கு வந்து ஓட்டுப் போடவே வருத்தப்படும் சோம்பேறிகள் பலருக்கு மத்தியில் இந்த தாத்தா அனைவரையும் வியக்க வைக்கிறார்.

உ.பி. மாநிலம் பதேபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜக்லால் தாத்தா. எந்தத் தேர்தல் வந்தாலும் உடனே போய் வேட்பு மனு தாக்கல் செய்து விட்டு வந்து விடுவார். பிறகு தனது ரிக்ஷாவை எடுத்துக் கொண்டு தனி ஆளாக பிரசாரம் செய்யவும் கிளம்பி விடுவார்.

இப்படியாக இதுவரை 22 முறை தேர்தலில் நின்றுள்ளார் ஜக்லால். அத்தனை முறையும் டெபாசிட் பறிபோனது தனிக் கதை.

இந்த நிலையில் நடப்பு லோக்சபா தேர்தலிலும் போட்டியிடப் போகிறாராம் ஜக்லால். இப்போது அவருக்கு வயது 80. ஆனாலும் என்னால் போட்டியிட முடியும், நான் போட்டியிட்டே தீருவேன் என்கிறார் உறுதியான குரலில்.

இதுகுறித்து அவர் கூறுகையில், தோற்கிறேனோ, ஜெயிக்கிறேனோ அதுகுறித்து எனக்குக் கவலை இல்லை. லோக்சபா தேர்தலில் நான் நிச்சயம் சுயேச்சையாக நிற்பேன்.

பதேபூர் உள்ளாட்சித் தலைவர் பதவிக்கு ஐந்து முறை போட்டியிட்டுள்ளேன். சட்டசபைத் தேர்தல்களில் எட்டு முறை போட்டியிட்டுள்ளேன். லோக்சபாவுக்கு இதுவரை 9 முறை போட்டியிட்டுள்ளேன். இது எனக்கு 23வது வாய்ப்பு. விட மாட்டேன் என்கிறார் ஜக்லால்.

ஏன் இப்படி என்று அவரிடம் கேட்டால், பதேபூர் மாவட்டத்தில் எத்தனையோ அரசியல் கட்சிகளின் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள், ஜெயிக்கிறார்கள். ஆனால் ஊருக்கு நல்லது மட்டும் செய்ய மாட்டேன் என்கிறார்கள்.

பதேபூரில்தான் நான் பிறந்தேன், இங்குதான் வாழ்ந்து வருகிறேன். எனது கடைசிக்காலமும் இங்குதான் முடியும். அதற்குள் எனது ஊருக்கு நல்லது செய்து பார்க்க ஆசைப்படுகிறேன். அதற்காகததான் தொடர்ந்து போட்டியிட்டு வருகிறேன் என்கிறார் உன்னத நோக்கத்துடன்.

ஜக்லால் தாத்தாவின் இந்த தேர்தல் ஆர்வம் உ.பி. மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஜக்லால் தாத்தாவின் பிரசார உத்தியே தனி. ஆள், அம்பு, பரிவாரம் எதுவும் இல்லாமல் தனது ரிக்ஷாவில் ஏறும் வாடிக்கையாளர்களிடம் ஐயா, கண்டிப்பாக எனக்கே ஓட்டுப் போடுங்க என்று கேட்டுக் கொள்வாராம்.

சில நேரங்களில் அவரது ஸ்டாண்டில் உள்ள சக ரிக்ஷாக்காரர்கள் இவரை அழைத்துக் கொண்டு பிரசாரம் செய்வார்களாம்.

அதை விட சுவாரஸ்யமான விஷயம் இருக்கிறது. இவரிடம் மட்டும் தேர்தல் அதிகாரிகள் தேர்தல் செலவுக் கணக்கே கேட்பதில்லையாம். அப்படியா என்று வியப்புடன் கேட்டால், ஆமாம், கடந்த பொதுத் தேர்தலின்போது ஒரு தேர்தல் பார்வையாளர் என்னை அழைத்து தேர்தல் செலவுக் கணக்கெல்லாம் தாக்கல் செய்கிறீர்களா என்று கேட்டார்.

ஒரு நாளை ஒரு ஆப்பிள் செலவு..

அதற்கு நான் எனக்கு ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள்தான் செலவாகிறது என்றேன். அவருக்குப் புரியவில்லை. விளக்கமாக கூறுமாறு கேட்டார்.

நானும், காலையி்ல் ஒரு ஆப்பிளை வாங்கி வைத்துக் கொள்வேன். பகல் பூராவும் பிரசாரம் செய்வேன். பின்னர் பிரசாரம் முடிந்ததும் அந்த ஆப்பிளை சாப்பிடுவேன். இவ்வளவுதான் எனது பிரசார செல்வு என்றேன். அதைக் கேட்டதும் அவர் என்னிடம் செலவுக் கணக்கை கேட்கவே இல்லை.

அதற்குப் பிறகு என்னிடம் யாரும் செலவுக் கணக்கு கேட்கவில்லை என்கிறார் ஜக்லால்.

ஜக்லாலிடம் அருமையான திட்டமும் உள்ளதாம். அதாவது பள்ளித் தேர்வில் தோல்வி அடையும் மாணவர்களுக்காகவே ஒரு பள்ளிக்கூடம் கட்டுவதுதான் அது. பள்ளித் தேர்வில் தோல்வி அடையும் மாணவர்களை யாரும் பள்ளியில் சேர்ப்பதில்லை. அப்படிப்பட்ட மாணவர்களுக்காக இந்த பள்ளியை கட்ட விரும்புகிறேன் என்கிறார் ஜக்லால்.

கடந்த லோக்சபா தேர்தலில் ஜக்லால் 3949 வாக்குகளைப் பெற்றாராம்.

நன்றி: thatstamil

சென்னை: 1999ம் ஆண்டு அரசியல் கட்சியாக உருவெடுத்தது முதல் பாமக இதுவரை கிட்டத்தட்ட ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு கூட்டணி என்ற கணக்கில் அணிகளை மாற்றி வந்துள்ளது.

2001 ...

2001ம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடான் இணைந்தார் டாக்டர் ராமதாஸ். அந்தத் தேர்தலில் 20 சீட்களில் வெற்றி பெற்று சாதனை படைத்தது பாமக.

ஆனால் தேர்தல் முடிந்த சில வாரங்களிலேயே அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது பாமக.

காரணம்: ஜெயலலிதா முதல்வராக பதவியேற்ற பின் அவரை சந்திக்க கோட்டைக்கு சென்றார் ராமதாஸ். முதல்வர் அறைக்கு பக்கத்தில் உள்ள விருந்தினர் அறையில் உட்கார்ந்திருந்தார்.. உட்கார்ந்திருந்தார்.. உட்கார்ந்திருந்தார்.. ஆனால், ஜெயலலிதா அவரை சந்திக்கவே இல்லை. காரணம் அவர் ஜெயலலிதாவை சந்திக்கப் போனது பாமகவுக்கு ராஜ்யசபா சீட் கோரி. இதையடுத்து அதிமுக கூட்டணியை விட்டு வெளியேறினார் ராமதாஸ்.

அடுத்த சில நாட்களில் திமுக தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட அவரை சிறையில் போய் சந்தித்து திமுக கூட்டணிக்கு வந்தார்.

2004...

2004ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றது பாமக. இந்த முறை திமுகவும், தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து கழன்று வந்து காங்கிரஸ் அணியில் இணைந்தது.

இந்தத் தேர்தலில் பாமகவுக்கு 6 எம்.பிக்கள் கிடைத்தனர். ராமதாஸின் மகன் டாக்டர் அன்புமணி மத்திய அமைச்சரானார்.

2006...

2006ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் திமுகவுடனான கூட்டணியைத் தொடர்ந்தார் டாக்டர் ராமதாஸ்.

ஆனால் இந்தத் தேர்தலில் 34 இடங்களில் போட்டியிட்ட பாமகவுக்கு 18 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது. கடந்த தேர்தலை விட இது 2 இடங்கள் குறைவாகும்.

2008 ...

2008ம் ஆண்டில் திமுகவுடன் கூட்டணி முறிந்தது. திருமங்கலம் இடைத் தேர்தலில் பாமக எந்த நிலையையும் வகிக்காமல் அமைதியாக இருந்து விட்டது.

2009...

2009 லோக்சபா தேர்தலில் மீண்டும் ஒருமுறை அணி மாறியுள்ளது பாமக. இந்த முறை அதிமுக தலைமையிலான தமிழக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது.

தேர்தலுக்கு பின் மீண்டும் வரும்-காங் நம்பிக்கை:

கூட்டணியை விட்டு பாமக போய்விட்டாலும் தேர்தலுக்குப் பின் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் நிலை ஏற்பட்டால் மீண்டும் பாமக தங்களிடம் வந்துவிடும் என்று காங்கிரஸ் நிச்சயமாக நம்புகிறது.

இதனால் தான் இன்று பாமக கூட்டணியைவிட்டு வெளியேறியது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, பாமகவை கூட்டணியில் நீடிக்க வைக்க எவ்வளவோ முயன்றோம். இப்போதும் கூட அவர்களுடன் கூட்டணியையே விரும்புகிறோம். அந்தக் கட்சியுடன் நல்லுறவு நீடிக்கும் என்றார்.

நன்றி: thatstamil dot com

சில ஆண்டுகளுக்கு முன்னர் சீனியர் அம்பானி மண்டையைப் போட்ட பிறகு பந்தாவாக அறிமுகப்படுத்தப்பட்ட ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் விளம்பரத்திற்கு எல்லா மொழி தினசரிகளிலும் ஒரு பக்க விளம்பரம், “ஒரு தபால் கார்டுக்கு ஆகும் செலவை விட இந்தியாவில் செல்பேசி கட்டணம் குறைவாக இருக்க வேண்டும் என்ற திருபாய் அம்பானியின் கனவை நிறைவேற்றுகிறோம்” என்று பீற்றினார்கள். உண்மையில் ரிலையன்சு செல்பேசி மலிவு விலையில் கூறுகட்டி விற்கப்படும் காய்கறி போல அள்ளி இறைத்தார்கள். மக்களுக்கும் அப்படி அம்பானியின் கனவை ஜூனியர் அம்பானிகள் நிறைவேற்றி விட்டார்களோ என ஒரு மயக்கம் இருந்தது.


அப்புறம்தான் அம்பானி சகோதரர்களின் பிக்பாக்கட் இரகசியம் வெளிப்பட்டது. தொலைபேசித் துறையில் அவர்கள் செய்த ஊழல், வெளிநாடு அழைப்புக்களை உள்ளுர் அழைப்புக்களாக மாற்றி பொய் எண் கொடுத்து பல நூறு கோடி ரூபாயை ஏப்பம் விட்டது, அரசியல் செல்வாக்கினால் அந்த திருட்டுத்தனத்திற்கு ஜூஜூபி அபராதம் கட்டி ஆட்டையைப் போட்டது எல்லாம் வெளிவந்த பிறகு திருபாய் அம்பானியல்ல, செத்த பின்னும் திருடும் திருட்டுபாய் அம்பானி என்பது சந்திக்கு வந்தது. அம்பானியின் ஆதாரப்பூர்வமான வம்பு தும்புகளையெல்லாம் கிழக்கு பதிப்பகம் போட்டிருக்கும் அம்பானி பற்றிய பக்திப் பரவசமான வரலாற்று இலக்கியத்தில் இருக்காது என்பதை முன்னரே சொல்லிக் கொள்கிறோம். பின்னர் இதெல்லாம் கிழக்கு பதிப்பகத்தில் இல்லையே என்று அசடு போல அதிர்ச்சியடையக்கூடாது.


திருபாய் அம்பானியின் கனவைப் போல ரத்தன் டாடாவும் ஒரு கனவு கண்டார். மும்பையின் மழைக்கால நாள் ஒன்றில் காரில் பயணம செய்த ரத்தன் டாடா ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பம் மழையில் நனைந்து கொண்டு ஸ்கூட்டரில் செல்வதைப் பார்த்து பரிதவித்துப் போனாராம். உடனே ஸ்கூட்டர் விலையில் அல்லது சற்று அதிகமாக ஒரு இலட்சத்தில் கார் தயாரித்து நடுத்தர வர்க்கத்தை கடைத்தேற்றுவது என்று முடிவு செய்தாராம். இதைக் கேள்விப்பட்ட மக்களும், அவர்களுக்கு முன்னரே டாடாவின் அருளுள்ளத்தை ஊதி விட்ட ஊடகங்களும் இந்த ஒரு இலட்ச ரூபாய் மதிப்புள்ள கார் சாத்தியம்தானா என்று கொஞ்சம் சந்தேகத்துடனும், நிறைய சந்தோஷத்துடனும் காத்திருந்தார்கள்.


டாடாவின் கனவை நனவாக்குவதற்கு மேற்கு வங்கத்தின் டாடா கம்யூனிஸ்டுகள் ஓடோடி வந்தார்கள். சிங்கூரில் இருபோகம் விளையக்கூடிய விவசாய நிலங்கள் சுமார் 950 ஏக்கர் நிலங்களை விவசாயிகளிடமிருந்து வம்படியாக பிடுங்கி பேருக்கு நிவாரணத்தொகை கொடுத்துவிட்டு மலிவு விலைக்கு டாடவுக்கு விற்றார்கள். இதுபோக டாடாவுக்கு சில ஆயிரம் கோடி கடன், மற்ற சலுகைகள் என தீபாராதனை திவ்யமாக நடந்தது. என்ன ஏது என தெரியாமல் தமது நிலங்களை மார்க்சிஸ்டு அரசு பிடுங்கியதைக் கண்ட விவசாயிகள் அதை எதிர்த்து போர்க்குணத்துடன் போராடினார்கள். அதையைம் மீறி டாடா, தமது பங்காளி புத்ததேவுடன் இணைந்து ஆலையை நிறுவினார். இடையில் நந்திகிராமில் சிறப்பு பொருளாதார மண்டலத்தை அடாவடியாக நிறுவிய மேற்கு வங்க அரசைக் கண்டித்து விவசாயிகள் போர்க்குணத்துடன் போராட, மார்க்சிஸ்டு அரசு போலீசு மூலம் பலரைச்சுட்டுக் கொன்றது. இதன் மூலம் சிங்கூருக்கும் இதுதான் பாடமென்று எச்சரிக்கையும் விடுத்தது.


ஆனால் சிங்கூர் விவசாயிகள், எதிர்க்கட்சிகள் உதவியுடன் எதிர்ப்பைத் தீவிரப்படுத்தி தொழிற்சாலையை முற்றுகையிட்டு போராடினார்கள். பலநாள் நீடித்த இந்தப் போராட்டத்தைப் பார்த்து டாடாவுக்கு பெருங்கோபம் வந்தது. உடனே தொழிற்சாலையை வேறு மாநிலத்திற்கு மாற்றுவதாகவும் அறிவிக்கப்பட்ட தேதியில் நானோ கார் வெளிவரும் எனவும் சபதம் செய்தார். அதுவரை உத்தரகண்டில் இருக்கும் டாடா மோட்டார் தொழிற்சாலையில் தற்காலிகமாக நானோ கார் தயாரிக்கப்படும் எனவும் அறிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த போலிக் கம்யூனிஸ்டு அரசு ரத்தன் டாடாவிடம் மண்டியிட்டு போகாதே என் கணவா என்று சென்டிமெண்டாகவும் புலம்பிப் பார்த்தது. விவசாயிகளை நந்திகிராம் போல அடக்குவதற்குத் துப்பில்லையென முறைத்துக் கொண்ட டாடா டூ விட்டுவிட்டு நடையைக் கட்டினார். அப்போதும் டாடாயிஸ்டு கம்யூனிஸ்டுகள் மேல் எந்தத் தவறுமில்லையென பாராட்டுப் பத்திரம் அளித்துவிட்டுத்தான் சென்றார்.


ரத்தன் டாடவுக்கும், புத்ததேவ் பட்டாசார்யாவுக்கும் எந்த அளவு தோழமை உறவு இருந்ததோ அதற்கு கடுகளவும் குறையாமல் டாடாவுக்கு மோடியுடனும் நட்பிருந்தது. மேற்கு வங்கம் கைவிட்டால் என்ன குஜராத் காத்திருக்கிறது என்று மோடி கம்பளம் விரித்தார். இமைப்பொழுதில் டாடா என்ற முதலாளிக்கும், மோடி எனும் பாசிஸ்டுக்கும் பேச்சுவார்த்தை நடந்து சடுதியில் ஒப்பந்தம் போடப்பட்டது. இனிமேல்தான் இலட்ச ரூபாய்க்கு விற்கப்படும் நானோ கார் மக்களுக்கு பட்டை நாமம் போட்ட கதை வருகிறது. நானோ காரின் மலிவு விலைக்கும், அதை சாத்தியமாக்கிய டாடாவின் அளப்பரிய ‘சமூக’ சேவைக்கும் மயங்கிப்போன நடுத்தர வர்க்கம் தங்களிடமிருந்து பிடுங்கப்ட்ட பணம் டாடாவின் மலிவு விலை காருக்கு எப்படி போய்ச் சேருகிறது என்பதை தெரிந்து கொள்ளட்டும்..


10.8.2008 அன்று குஜராத் அரசுக்கும் டாடா நிறுவனத்திற்கும் போடப்பட்ட இந்த இரகசிய ஒப்பந்தம் யார் யாருக்கு சேவை செய்கிறார்கள் என்பதை போட்டுடைக்கிறது.


குஜராத்தின் சதானந்த் இடத்தில் அமைய இருக்கும் டாடாவின் நானோ தொழிற்சாலைக்கு 1100 ஏக்கர் விவசாய நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. விவசாய நிலங்களை விவசாயமற்ற நடவடிக்கைகளுக்கு விற்கக்கூடாது என்ற விதி மீறப்பட்டு அதுவும் மலிவான விலையில் 400 கோடி ரூபாய்க்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பணமும் இரண்டு வருடங்களுக்குப் பிறகு எட்டு தவணைகளில் டாடா நிறுவனம் கட்டினால் போதும். விவசாய நிலங்களை இப்படி தொழிற்சாலைக்கு கொடுக்கும் பட்சத்தில் அதற்கென தனியாக பணம் கட்ட வேண்டுமென்ற விதியும் டாடவுக்காக ரத்து செய்யப் பட்டது.


2000 முசூலீம் மக்களை கொன்ற கும்பலுக்கு தலைமை தாங்கியிருக்கும் மோடிக்கு அப்பாவி விவசாயிகளை மிரட்டத் தெரியாதா என்ன? மேலும் மேற்கு வங்கம் போல அரசியல் ரீதியாக அணி திரள இயலாத அந்த அப்பாவிகள் தமது நிலத்தை கொடுத்துவிட்டு இன்றும் புழுங்குகின்றனர். அடுத்து இந்த நில விற்பனைக்கான பத்திரப்பதிவுக்கான 20 கோடி ரூபாயை மாநில அரசு ரத்து செய்து இலவசமாக பதிவு செய்து கொடுத்திருக்கிறது.


டாடா நிறுவனம் தொழிற்சாலையை அமைப்பதற்கு 9570 கோடி ரூபாயை குஜராத் அரசு 0.1% வட்டிக்கு கொடுத்திருக்கிறது. இதில் சிங்கூரிலிருந்து, சதானந்த் பகுதிக்கு தொழிற்சாலையை மாற்றுவதற்கான செலவுப் பணம் 2330 கோடிரூபாயும் அடக்கம். இந்த 9570 கோடிப் பணம் இருபது வருடங்களுக்குப் பிறகு டாடா நிறுவனம் அதுவும் பல தவணைகளில் திருப்புமாம். தொழிற்சாலை அமைய இருக்கும் இடத்தில் தரமான சாலை, 14,000 கனமீட்டர் நீர், மின்வசதி இன்னபிற அடிப்படைக் கட்டுமான வசதிகளை 700 கோடி ரூபாயில் குஜராத் அரசே செய்து கொடுக்கும். மின் தீர்வை கட்டுவதற்கும் டாடாவுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


மொத்தத்தில் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு டாடாவின் நானோ கார் தொழிற்சாலைக்கு குஜராத் அரசு செலவு செய்யப்போகும் அல்லது இழக்கப்போகும் பணத்தின் மதிப்பு 30,000 கோடி ரூபாய்.


ஆக ஊரைக் கொள்ளையடித்து ஆடம்பரத் திருமணத்தில் கிடா வெட்டி மக்களுக்கு இலவச விருந்து அளிக்கும் கதைதான் இங்கும் நடந்திருக்கிறது. இவ்வளவு சலுகைகள், கடன் தொகை, இலவசமான அடிப்படை வசதிகள் எல்லாம் இருந்தால் நானோ காரை ஒரு இலட்ச்திற்குப்பதில் இலவசமாகவே அளிக்கலாமே? ஆம் நானோ காருக்கு நாம் கொடுக்கும் ஒரு இலட்சத்திற்கும் பின்னால் நமது பணம் இரண்டு இலட்சம் ஏற்கனவே பிடுங்கப்பட்டிருக்கிறது.


இன்னும் எட்டு மாதங்களில் உற்பத்தியை ஆரம்பிக்கப் போகும் தொழிற்சாலையில் முதலில் ஆண்டுக்கு 2.50 இலட்சம் கார்களும், பின்னர் அது 5 இலட்சமாக உயர்த்தி உற்பத்தி செய்யப்படுமாம். வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும் திட்டமும் உண்டு.


விவசாயிகளுக்கும், சிறு தொழில் செய்யும் முதலாளிகளுக்கும், கல்விக்காக மாணவர்களும் கடனுக்காக வங்கி சென்றால் ஆயிரம் கேள்விகளையும், அலைக்கழிப்புக்களையும் சந்திக்கும் மக்கள் இருக்கும் நாட்டில் ஒரு முதலாளிக்கு மின்னல் வேகத்தில் எவ்வளவு பெரிய சலுகைகள், கடன்கள்? மற்றபடி டாடாவுக்கும், குஜராத் அரசுக்கும் போடப்பட்டிருக்கும் இந்த ஒப்பந்தம் இரகசியமாகும். இதை எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரசு தனது அரசியலுக்காக வெளிக் கொணர்ந்திருக்கிறது. இப்படி அரசு இரகசியம் எப்படி வெளியே போனது என மோடியின் அரசு விசாரிக்கிறதாம். இந்த விவரங்கள் அனைத்தும் 12.11.2008 தேதியிட்ட இந்து பேப்பரில் வந்திருக்கிறது.


நானோவின் பின்னே இப்படி அப்பட்டமான கொள்ளையும், சுரண்டலும் இருப்பதுதான் அதன் மலிவு விலைக்கு காரணம். பொதுத் துறைகளை தனியார் முதலாளிகளுக்காக நசிய விட்டு பின்னர் தவிட்டு ரேட்டில் விற்பனை செய்யும் நாட்டில் ஒரு முதலாளிக்கு முப்பதாயிரம் கோடி இனாமென்றால் இந்த நாட்டை ஆள்வது யார்? தரகு முதலாளிகளா, இல்லை ‘ மக்களால்’ தேர்ந்தெடுக்கப்பட்ட அரசா?


தனது விளம்பரத்தில் பல வசதிகள் இருப்பதாக புனைந்துரைக்கும் டாடாவின் நானோ கார் crash test எனப்படும் விபத்து சோதனையை மட்டும் செய்து சான்றிதழ் வாங்கவில்லையாம். இதன் பல உறுப்புக்கள், இணைப்புக் கருவிகள் மலிவான பிளாஸ்டிக்கில் செய்யப்பட்டிருப்பதால் டாடா இந்த சோதனைக்கு தயாராக இல்லை. அதாவது இந்தக் காரை ஒரு டூ வீலர் கூட மோதி பொடிப்படியாக நொறுக்கி விடலாம். நடுத்தர வர்க்கம் சுலபமான வழியில் பரலோகம் செல்லும் வசதியை நானோ ஏற்படுத்தித் தருகிறது.


உலகமெங்கும் பொருளாதார வீழ்ச்சிக்காக ஆட்டோமொபைல் தொழில் நசிந்து வரும வேளையில் டாடவின் நானோ கார் அறிமுகம் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறதாம். மேலும் இந்தக் காரை ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்யும் திட்டமும் டாடவிற்கு இருக்கிறதாம். 2011 ஆம் ஆண்டு விபத்து சோதனை உட்பட எல்லா சோதனைகளிலும் வென்று ஐரோப்பாவின் மலிவான கார் என நானோ விற்கப்பட இருக்கிறதாம். வெள்ளைக்காரனது உயிருக்கு மட்டும் அவ்வளவு எச்சரிக்கைகள்! அதை பரிசோதிப்பற்கு இந்தியனின் உயிர்! பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் தங்களது சோதனைகளுக்கு இந்திய மக்களை எலிகளைப் போலப் பயன்படுத்துவது போல டாடவும செய்கிறது.


இந்தியாவின் பொதுப்போக்குவரத்திற்கு பயன்படும் வாகனங்கள் மொத்த வாகனங்களில் ஐந்து சதவீதமென்றால் இதைப் பயன்படுத்தும் மக்களின் சதவீதம் 70. ஆனால் மொத்த வாகனங்களில் 70 சதவீதததைப் பிடித்திருக்கும் தனியார் வாகனங்கள் அல்லது கார்கள் மக்களில் 5 சதவீதம் பேருக்குத்தான் பயன்படுகிறது. எனில் நானோவால் ஏமாறப்போவது பெரும்பான்மை மக்கள்தான்.


அமெரிக்காவின் போர்டு முதலாளிக்காக அங்கே பொதுப் போக்குவரத்து திட்டமிட்டே ஒழிக்கப்பட்டு கார் என்பது அத்தியாவசியப் பொருளாக மாற்றப்பட்டது. அப்போதும் திவால் நிலைக்கு வந்திருக்கும் போர்டு கம்பெனிக்கு அமெரிக்க அரசு நிவாரணத் தொகை வழங்கி காப்பாற்றுகிறது. இந்தியாவில் தொழிலை ஆரம்பிப்பதற்கே அரசு போட்டி போட்டுக்கொண்டு பணத்தை வழங்குகிறது. இரண்டிற்கும் பெரிய வேறுபாடில்லை.


இறுதியாக நானோ கார் மும்பையில் அறிமுகப்படுத்தப்பட்ட24.3.08 திங்கட்கிழமை மேற்கு வங்கத்திற்கு ஒரு சோகமான நாளென்று சி.பி.எம்.டாடயிஸ்டு அரசின் தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் நிருபம் சென் வருத்தப்பட்டு பேசியிருக்கிறார். மேற்கு வங்கம் சிங்கூரில் உற்பத்தி செய்யப்பட வேண்டிய நானோ கார் மோடியின் மண்ணிற்கு சென்றது குறித்துத்தான் இந்த வருத்தம். குஜராத் அரசு செலவிடப்போகும் முப்பதாயிரம் கோடி ரூபாயை டாடா என்ற முதலாளிக்காக மேற்கு வங்கம் செலவிட முடியவில்லையே என பாட்டாளிகளின் தோழன் இல்லையில்லை டாட்டாக்களின் தோழன் வருத்தப்படுகிறார். ஆனால் டாட்டாக்களை கைவிடாமல் இந்துக்களின் தோழன் உதவியிருப்பதால், டாட்டாக்களின் தோழன் அடுத்த தேர்தலில் இந்துக்களின் தோழனோடு கூட்டணி வைத்துக்கொண்டால் யாரும் வருத்தப்படத் தேவையில்லை.


கூட்டிக்கழித்துப் பார்த்தால் நானோ காரின் மலிவும், அரசியலும், திரைமறைவுச்சதிகளும், ஒன்றை வெளிப்படையாக தெரிவிக்கின்றன. அது இந்திய மக்களை அவர்களுக்கே தெரியாமல் சுரண்டுவதில் வலதும் இடதும் சேர்ந்து தரும் ஆதரவில் முதலாளிகளின் ஆட்சிதான் இங்கு நடக்கிறதென உணர்த்துகின்றது.


ஒரு இலட்ச ரூபாய்க்கு காரா என வாய் பிளப்பவர்களின் மூளைக்கு இந்த விளம்பரத்தையும் , கட்டுரையையும கொண்டு செல்லுமாறு உங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.


(படத்தை பெரிதாக காண படத்தின் மேல் சொடுக்கவும்)

நன்றி: வினவு



RELATED LINKS :


நானோ கார் : மலிவு விலையின் பின்னே மறைந்து கிடக்கும் உண்மைகள்

நேனோ கார் ரிப்பேர் ஆனால் கையில் எடுத்து கொண்டு செல்லாம்!

'ஓ' போடு ஒரு சமூக விழிப்புணர்வு இயக்கம்

'ஓ' போடு என்றால் ஓட்டு போடு என்று அர்த்தம். ஓட்டு போடுவது மக்களின் உரிமையும் கடமையும் ஆகும். ஓட்டு போடும்போது 49 ஓ பிரிவின் கீழ் ஓட்டு போட ஒவ்வொரு வாக்காளருக்கும் அரசியல் சட்டப்படி உள்ள உரிமையை தெளிவுபடுத்துவது எமது இயக்கத்தின் இன்னொரு நோக்கம்.

சராசரியாக எந்தத் தேர்தலிலும் 45 சத விகித வாக்காளர்கள் ஓட்டு போடுவதில்லை. வெற்றி பெறுவதாக அறிவிக்கப்படும் வேட்பாளர் பதிவான வாக்குகளில் 30 சதவிகிதம் வாங்கினாலும், அது மொத்த வாக்குகளில் 16 சதவிகிதம் மட்டுமேதான். ஓட்டு போடாதவர்களும் ஓட்டு போட வந்தால், பல தேர்தல் முடிவுகள் மாறிவிடும்.

ஏன் ஓட்டு போடுவதில்லை என்பதற்கு சொல்லப்படும் பல காரணங்களில் ஒன்று இருப்பதில் ஒருவருக்கு ஓட்டு போடவும் விருப்பமில்லை; எந்த வேட்பாளரையும் ஏற்க முடியவில்லை என்பதாகும்.

எல்லா வேட்பாளர்களையும் நிராகரிக்கும் உரிமையையும் வாக்காளருக்கு சட்டப்படி கொடுத்திருப்பது இந்திய அரசியல் சட்டத்தின் சிறப்பாகும். தேர்தல் விதிகள் 1961ன் கீழ் 49 (ஓ) பிரிவு இந்த உரிமையை வாக்காளருக்கு வழங்கியிருக்கிறது. ஓட்டு போடுவதற்காக விரலில் மை வைத்த பிறகு, எந்த வேட்பாளருக்கும் ஓட்டளிக்க விரும்பவில்லை என்று வாக்காளர் தெரிவிக்கலாம். அதை ஓட்டுச் சாவடி அதிகாரி பதிவு செய்யவேண்டும் என்பதே 49 (ஓ).

வாக்காளர் இதற்காக எந்த விண்ணப்பத்தையும் நிரப்பத் தேவையில்லை. ஓட்டுச் சாவடி அதிகாரியிடம் சொன்னால் போதும். அவர் தன்னிடம் உள்ள பாரம் 17 ஏ என்ற பதிவேட்டில் இதை எழுதிக் கொள்வார். அதில் நாம் கையெழுத்திட்டால் போதும்.

எந்த வேட்பாளரும் ஏற்கத் தகுந்தவராக இல்லை என்றால் அதை அரசியல் கட்சிகளுக்கு நாம் உணர்த்த வேண்டும். அதற்கு சிறந்த வழி ஓட்டு போடாமல் இருப்பது அல்ல. 49 ஓவின் கீழ் பதிவு செய்வதே சரியான முறையாகும். அரசியலே சரியில்லை என்று அலுத்துக் கொண்டு நாம் ஓட்டு போடாமல் இருந்தால், அதனால் அரசியல் கட்சிகளுக்கு எந்த நஷ்டமும் கிடையாது. ஆனால் 49 ஓவின் கீழ் நம்முடைய ஓட்டைப் பதிவு செய்தால் நமது அதிருப்தியை அவர்களுக்குத் தெரியப்படுத்த முடிகிறது. ஒரு தொகுதியில் ஜெயிக்கிற வேட்பாளரை விட , 49 ஓவுக்கு அதிக ஓட்டு விழுந்தால், எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். அப்போது 'இனி நேர்மையான அரசியல் செய்ய வேண்டும், நல்ல வேட்பாளர்களை நிறுத்த வேண்டும்; இல்லாவிட்டால் மக்கள் ஆதரவு கிடைக்காது' என்பது அரசியலில் உள்ளவர்களுக்கு உறைக்கும். மக்களுடைய அதிருப்தியை அரசியல்வாதிகளுக்கு தெரியப்படுத்த சிறந்த வழி - 49 ஓ.

'ஓ' போடு இயக்கம் கீழ் வரும் கோரிக்கைகளை வலியுறுத்துகிறது.

1. எல்லா வாக்காளர்களும் ஓட்டு போட வேண்டும். ஓட்டு போடாமல் இருப்பது அரசியலின் தரத்தை மேம்படுத்த விடாமல் தடுப்பதாகும்.

2. எந்த வேட்பாளரும் ஏற்கத் தகுந்தவராக இல்லை என்றால் அதை அரசியல் கட்சிகளுக்கு உணர்த்துவதற்கான சிறந்த வழி ஓட்டு போடாமல் இருப்பது அல்ல. 49 ஓவின் கீழ் பதிவு செய்வதே சரியான முறையாகும்.

3. ரகசிய ஓட்டு என்பது அரசியல் சட்டப்படி வாக்காளருக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமையாகும். ஆனால் 49 ஓவை ரகசியமாகப் போடமுடியாமல் தேர்தல் ஆணையம் வைத்திருப்பது சட்டப்படி தவறாகும். இதையும் ரகசிய வாக்காக அளிக்கும் விதத்தில் மின் வாக்கு இயந்திரத்தில் 49 ஓவுக்கு ஒரு தனி பட்டனை வரும் தமிழக சட்ட மன்றத் தேர்தலிலேயே தேர்தல் ஆணையம் ஏற்படுத்த வேண்டும்.

4. ஓட்டுச் சாவடி அதிகாரிகளுக்கு வகுப்பு நடத்தும்போது தவறாமல் 49 ஓ பிரிவு பற்றி கற்றுத் தருவது தேர்தல் ஆணையத்தின் கடமையாகும். ஓட்டுச் சாவடிக்கு வந்து 49 ஓ பிரிவின் கீழ் பதிவு செய்ய விரும்பும் எந்த வாக்காளரையும், அது பற்றி எனக்குத் தெரியாது என்று சாவடி அதிகாரி திருப்பி அனுப்புவது தவிர்க்கப்பட வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி 'ஓ' போடு இயக்கம் பிரசாரம் செய்யும்.

ஓட்டு போடாமல் இருப்பது, நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும்.
49 ஓ போடுவது, நம்மை இனி ஏமாற்ற முடியாது என்று அறிவிப்பதாகும்.

ஓட்டு போடுங்க. 49 ஓ போடுங்க.

SOURCE: http://keetru.காம்

--------------------------------------------------------------------------------------------------------
ஓ போடு' - ஒரு சமூக விழிப்புணர்வு இயக்கம்

தொடர்புக்கு: ஞாநி 09869046486 / 9444024947.

E mail: fortynineohpodu (at) yahoo (dot) com

49-ஓ போடு - ஜூனியர் விகடன் கட்டுரை

'ஓ' போடு இயக்கத்தின் கருத்துக்களை இயன்ற அளவுக்கு பரப்புங்கள்; நண்பர்களுடன் விவாதியுங்கள்.
--------------------------------------------------------------------------------------------------------

இந்தியா - நியூசிலாந்து 4வது ஒரு நாள் போட்டியில் சேவாக்கின் அதிரடி சதத்தால் இந்தியா 84 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் நான்காவது ஒரு நாள் போட்டி ஹாமில்டனில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

நியூசிலாந்தின் துவக்க ஆட்டக்காரர்கள் மெக்கல்லம், ரைடர் அணிக்கு நல்ல துவக்கம் தந்தனர். ரைடர் 46 ரன்களும், மெக்கல்லம் 77 ரன்களும் எடுத்தனர். இரண்டு முறை மழை குறுக்கிட்டதால் ஓவர்கள் இருதரப்புக்கும் 47ஆக குறைக்கப்பட்டன. கடைசி ஓவர்களில் மெக்கிளஷான், எல்காட் ‌ஜோடி சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். நிர்ணயிக்கப்பட்ட 47 ஓவர்களில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 270 ரன் எடுத்தது.

இந்திய தரப்பில் இஷாந்த சர்மா 2 விக்கெட்டுகளையும், யுவராஜ் சிங், பதான், ஜாகிர்கான் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

மழை காரணமாக இந்தியாவிற்கு 36 ஓவர்களில் 220 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என் நிலையில் களமிறங்கிய இந்தியா. சேவாக் அதிரடியாக விளையாடி 60 பந்துகளில் சதம் அடித்தார். இந்தியா 23.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 201 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. சேவக் (125), காம்பிர் (63) அவுட்டாகாமல் இருந்தனர். தொடர்ந்த மழை பெய்ததால் "டக்வொர்த் லீவிஸ்' முறைப்படி இந்தியா 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆட்டநாயகன் விருது சேவாக்கிற்கு வழங்கப்பட்டது.

சாதனை : இப்போட்டியில் வென்றதன் மூலம் இந்தியா 3-0 கணக்கில் தொடரை கைப்பற்றி நியூசிலாந்து மண்ணில் முதல் முறையாக ஒரு நாள் தொடரை கைப்பற்றி இந்திய அணி சாதனை படைத்துள்ளது.

மழை குறுக்கீடு : இன்றைய போட்டியில் வருண பகவானின் விளையாட்டே சிறப்பாக இருந்தது. மழை குறுக்கீடு காரணமாக நியூசிலாந்திற்கு 47 ஓவர்களாக குறைக்கப்பட்டது. பின்னர் இந்திய விளையாடிய போது பல முறை மழை குறுக்கிட்டதால் முதலில் 47 ஓவர்களில் 281 ரன்கள் எடுக்க வேண்டும் எனவும், அடுத்து 43 ஓவர்களில் 263 ரன்கள் எடுக்க வேண்டும் எனவும் இறுதியில் 36 ஓவர்களில் 220 ரன்கள் எடுக்க வேண்டும் எனவும் இந்தியாவிற்கு இலக்கு மாற்றப்பட்டது. மீண்டும் 23.3 ஓவர்களில் மழை பெய்ததால் இந்தியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.



இன்று நியுசிலாந்தில் நடைபெற்ற 4-வது ஒரு நாள் போட்டியில் சேவாக் 60 பந்துக்களில் சதம் அடித்து, 108 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். ஆட்டத்தின் 18.4 வது பாலில் இமாலய சிக்ஸர் அடித்து இந்த சதத்தை சேவாக் பூர்த்தி செய்தார்.

இதன் மூலம் குறைந்த பந்துகளில் அதிவேக சதம் அடித்ததில் இந்தியாவில் 1 மற்றும் உலகில் 7-வது வீரர் என்ற சாதனை படைத்தார் சேவாக்.

இதற்கு முன் 1988-இல் அசாருதின் 62 பந்துகளில் அதிவேக சதம் அடித்த முதல் இந்தியர் ஆவார்.(vs New Zealand - 17/12/1988)

37 பந்துகளில் அதிவேக சதம் அடித்த பாகிஸ்தானின் 'சையத் அபிரிடி' முதல் இடத்தில் உள்ளார். (vs ஸ்ரீலங்கா - 04/10/1996)

வரும் நாடாளுமன்ற தேர்தலின் போது ஓட்டளிக்க விருப்பமில்லாதவர்கள் வாக்கு சாவடிக்கு சென்று அங்குள்ள பதிவேட்டில் எழுத்து மூலம் தெரிவிக்கலாம் என தமிழக தேர்தல் ஆணையர் நரேஷ் குப்தா தெரிவித்துள்ளார்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடந்த தேர்தல் சீர்திருத்தம் குறித்த கருத்தரங்கில் தமிழக தேர்தல் ஆணையர் நரேஷ் குப்தா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,

வாக்காளர்கள் யாருக்கும் வாக்களிக்காமல் இருக்க உரிமை உண்டு.
இதற்கு தேர்தல் விதிமுறைகளில் வழி உண்டு. தேர்தல் சட்டத்தின் 49-ஓ பிரிவின் கீழ் யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள், சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடிக்குச் சென்று, நான் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்று கூறி அதற்குரிய விண்ணப்பத்தை தேர்தல் அதிகாரியிடமிருந்து பெற்று நிரப்பித் தர வேண்டும்.

இருப்பினும் இப்படி ஒரு வாக்காளர் செய்வதற்கு உரிமை உண்டு என்பது தேர்தல் அதிகாரிகளுக்கே சரிவர தெரியவில்லை. எனவே இதுகுறித்து இந்த முறை அனைத்து வாக்குச் சாவடி தேர்தல் அதிகாரிகளுக்கும் விரிவான முறையில் விளக்கப்படவுள்ளது.

வருங்காலத்தில் இந்த முறையை ஓட்டுப்பதிவு இயந்திரத்திலேயே வாக்காளர்கள் தெரிவிப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தொரடப்பட்டுள்ளது. அது தற்போது நிலுவையில் உள்ளது.

தேர்தலில் 35 சதவீத வாக்குகள் பெற்ற கட்சிகள் ஆட்சி அமைத்து விட கூடிய நிலை உள்ளது. இந்த நிலை மக்களின் உணர்வை பிரதிபலிப்பதாக இருக்காது.

புதிதாக தொடங்கப்படும் அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் ஒரு முறை பதிவு செய்து விட்டு, அந்த கட்சி செயல்படாமல் இருந்தாலும் தேர்தல் ஆணைய பதிவில் தான் இருக்கும். அதனை ரத்து செய்வதற்கு சட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை.

தேர்தலின் போது அரசியல் கட்சிகள் மேற்கொள்ளும் செலவை அரசே ஏற்பதில் சிக்கல்கள் உள்ளது என்றார் நரேஷ் குப்தா.

நன்றி : தட்ஸ்தமிழ் டாட் காம்

Twitter-ல் என்னை தொடர...

    follow me on Twitter

    இணையத்தில் சம்பாதிக்க...

    என்னை பற்றி...

    My photo
    Bangalore, Karnataka, India
    நீங்க நம்ப பிளாக்க படிக்க வந்ததே பெரிசு! இதுல என்னையப் பத்தி வேற படிக்கணுமா? என்ன கொடுமை சார் இது?